மயிலாடுதுறையில் நண்பர் ஒருவரோடு மணிக்கூண்டு அருகில் உள்ள காளியாக்குடி ஹோட்டலில் மாலை சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது பலரும் வெளியில் ஓடிப் போய் எட்டிப் பார்த்தனர். நானும் என்னவோ என்று எழுந்து போய்ப் பார்த்தேன்.
ஹோட்டலுக்கு சற்றுத் தள்ளி எதிர் வரிசையில் ஒரு டிராக்டரும் அதன் கீழே அப்படியே கவிழ்ந்து படுத்தாற் போல ஒரு மாணவியும்!
சரி, டிராக்டரில் மோதி அந்த (பள்ளிக்கூட) மாணவி கீழே விழுந்துவிட்டார் போலருக்கிறது என்று நினைத்து நானும் நண்பரும் அவரைத் தூக்கி விட ஓடினோம். கிட்ட நெருங்கும் போது தான் அதிர்ந்து போனோம். மடக்கிப் போட்டாற்போல தலை மண் பக்கம் திரும்பி படுத்திருந்த அந்த மாணவியின் முகத்திலிருந்து மண்ணில் சிவப்பு திரவம் பலமாக பரவத் தொடங்கியது. "ஐயோ ரத்தம்" என்று கத்தினான் நண்பன்.
ஓரிரு நிமிடங்களில் அந்த மாணவியின் தலைப் பிரதேசம் முழுக்க சுற்றிலும் ரத்தம் தேங்கி நின்றது.
கூப்பிடு தொலைவில் நின்றிருந்த இரண்டு டிராபிக் போலீஸாரை போய் கூப்பிட்டு வந்தோம். டிராக்டரை ஓட்டி வந்திருந்தவனும், கூடவே உட்கார்ந்து வந்திருந்த ஒரு நான்கைந்து பேரும் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தார்கள்.
"சார், அவனுங்க ஓடுறானுங்க" என்று போலீஸாரிடம் சொன்ன போது "எங்க சார் போயிடப் போறானுங்க?" என்று பதில் வந்தது 'ஸ்காட்லாந்து யார்டு'க்கு tough fight கொடுக்கும் தமிழக காவலர்களிடமிருந்து பொறுப்பாக..
"அந்தப் பொண்ணுக்கு என்ன ஆயிடிச்சின்னு பாருங்க" என்று சொன்னதற்கும் "அதான் இவ்வளவு ரத்தம் வந்திருக்கே. அவ்ளோ தான்" என்று சொல்லி விட்டு பக்கத்தில் இருந்த மெடிக்கல் ஷாப் நோக்கி இரண்டு காவலர்களும் நடந்து போனார்கள் - போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க!
ஏரியா முழுக்க எக்கச்சக்க கூட்டம் கூடியது. கூடவே அந்த மாணவியின் தலையைச் சுற்றிலும் எக்கச்சக்க ஈக்கள் மொய்க்கத் தொடங்கியிருந்தன.
குப்புற படுத்த நிலையில் இருந்ததால் அந்தப் பெண் யாராக இருக்கும் என்று அப்போது யாருக்கும் தெரியவில்லை. (யூனிபார்மை வைத்து)செய்தி அந்த மாணவி படித்த பள்ளிக் கூடத்திற்கும் சென்று அங்கிருந்து பல மாணவிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். வந்து பார்த்த மாத்திரத்திலேயே அந்தப் பெண் யாரென்று அவர்களுக்கு தெரிந்து போயிற்று. கதறல் ஒலிகள் அதிகமாயின.
போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே, அங்கே நடு ரோட்டில் நின்றிருந்த டிராக்டரை அப்புறப்படுத்த வேண்டிய நிர்பந்தம். இரண்டு காவலர்களும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. "ஸ்டேஷனிலிருந்து ஆள் வரணுமப்பா" என்று சொன்னார்கள். "அப்போ நீங்க ரெண்டு பேரும் எங்க இருந்து வந்தீங்க?" என்று யாருக்கும் கேட்கத் தோன்றவில்லை - என்னையும் சேர்த்து! கூட்டத்தில் இருந்த நாங்கள் சிலர் சேர்ந்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்த ஆரம்பித்தோம்.
ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போலீஸ் ஸ்டேஷனிலிருந்து அரை மணி நேரம் கழித்து கும்பலாக நான்கைந்து போலீஸார் வந்தனர். வரும் போதே "போயிடுச்சா?" என்று கேட்டுக் கொண்டே தான் வந்தார்கள். கோடு போட்டார்கள். டிராக்டரை அருகிலிருந்த ஸ்டுடியோவிலிருந்து ஆளை வரச் சொல்லி படமெடுக்க வேண்டும் என்றார்கள். அதற்கும் அரை மணி நேரத்துக்கும் முன்பு வரை திறந்திருந்த அந்த ஸ்டுடியோ அப்போது மூடி இருந்தது. பிறகு விசாரித்ததில் இப்படி எடுக்கப்படும் போட்டோக்களுக்கு போலீஸிலிருந்து காசு பெயராது என்பதினால் அந்த ஸ்டுடியோக்காரர் எஸ்கேப் என்று கேள்விப்பட்டேன்.
கேமராவும் கையுமாக அலைந்து கொண்டிருந்தபடியால் ஒரு சில புகைப்படங்களை எடுத்தேன். "அந்த போட்டோக்களை கொஞ்சம் தர முடியுமா?" என்று வேறு போலீஸார் கேட்டார்கள்.
அடுத்த நாள் சம்பந்தப் பட்ட பள்ளிக் கூடத்திற்கு சென்ற போது அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையை சந்திக்க முடியவில்லை. அவர் விடுப்பில் சென்று விட்டார் என்றார்கள்.
பள்ளிகூடங்கள், அரசு அலுவலகங்கள், ஆஸ்பத்திரிகள், பிரபல நிறுவனங்கள் என்று எப்போதும் ஜெக ஜோதியாக காட்சியளிக்கும் அந்த பட்டமங்கலத் தெருவில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகம். சாலையின் இரு பக்கமும் எக்கச்சக்கமாக மண் வேறு தேங்கி இருக்கும். ஒரு பஸ் அல்லது லாரி வந்தால் போதும்.. எதிரில் வருபவர்கள் மணலில் தான் போய் ஒதுங்க வேண்டும்.
இது குறித்து இந்தச் சம்பவம் நிகழ்வதற்கு பல மாதங்களுக்கு முன்னரே கூட நான் ஒரு சிறிய கட்டுரை எழுதி அது பத்திரிகையில் வெளியாகியிருந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருந்தும் எதுவுமே நிகழவில்லை. இந்த மாணவி இறந்தது கூட டிராக்டருக்காக ஒதுங்க... மணலில் சைக்கிள் சிக்கி கீழே விழுந்து, டிராக்டர் மேலே ஏறியதால் தான்!
மறுநாள் பள்ளிக்கூடத்தில் சென்று விசாரித்த போதும் கூட அவர்கள் இதைத்தான் குறையாகச் சொன்னார்கள்.
மீண்டும் இது குறித்து ஒரு கட்டுரை எழுதி அதுவும் பிரசுரமாகியது.
அந்த இதழ் கடைகளில் கிடைத்த தினத்தன்று இரவு சுமார் பத்தரை இருக்கும். என்னைத் தேடி ஒரு பத்து, பனிரெண்டு பேர் வந்திருந்தார்கள். "நாங்க எல்லாம் அந்த ஸ்கூலுக்கு சம்பந்தப்பட்டவர்கள். ஒரு சிலர் அங்கே பணி புரிகிறோம். மற்றவர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் இருக்கிறோம். எல்லாம் எழுதினீங்க, ஆனா ஸ்கூல் பசங்க கிட்ட இருந்து இன்ஸூரன்ஸ் தொகை வசூல் பண்ணினாங்க. அதை இவ்வளவு நாளா கட்டாமலேயே வெச்சிட்டு நேத்தைக்கு அந்த பொண்ணு செத்துப் போனப்புறம் அவசர அவசரமா போய் கட்டியிருக்காங்க. அந்தப் பொண்ணு குடும்பத்துக்கு இன்ஸூரன்ஸ் தொகையாவது கெடைச்சிருக்கும்" என்று புகார் சொன்னார்கள்.
மறுநாள் மறுபடியும் ஸ்கூல் சென்றால், அன்றைக்கும் தலைமை ஆசிரியையை சந்திக்க முடியவில்லை. டெலிபோன் நம்பர் வாங்கி தொடர்பு கொண்டு பேசியதில், "அப்படியெல்லாம் இல்லை" என்று சொல்லி பேச்சைத் துண்டித்தார்.
மீண்டும் பாலோ-அப் எழுதி வெளியாகியது.
இன்ஸூரன்ஸ் தொகையை குறிப்பிட்ட சமயத்தில் கட்டாமல் வைத்திருந்தது தவறாகத் தெரியவில்லை சம்பந்தப்பட்டவர்களுக்கு. இதை எழுதியதற்காக எனக்கு பல பேருக்கு எதிராக 'லட்சார்ச்சணை' நடந்தது தனிக்கதை.
***
இது ஆயிற்று கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு மேல்!
சமீபத்தில் ஊருக்கு சென்றிருந்தேன்.
அதே பட்டமங்கலத் தெரு..
அதை விட மோசமான டிராபிக்..
அதே போல சாலையின் இரண்டு பக்கமும் மணல் குவிந்து கிடக்கிறது.
ஒரே வித்தியாசம்.. சைக்கிளுக்கு பதிலாக மோட்டார் சைக்கிள்களில் பெண்கள் டிராக்டருக்கும், லாரிக்கும் பயந்து மணலில் வண்டியை ஓட்டுகிறார்கள்.




